செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடியாக குறைந்தது

Published On 2018-05-11 07:35 GMT   |   Update On 2018-05-11 07:35 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் அதிகபட்சமாக 1970 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் நேற்று மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து 1577 கன அடியாக குறைந்தது.

இன்று இது மேலும் குறைந்து ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நேற்று மாலை முதல்நீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்த நீர்மட்டம் தற்போது மீண்டும் குறையத் தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் 35.03 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றுகாலை 35.21 அடியாக உயர்ந்தது. இன்று காலை இது 35.13 அடியாக குறைந்துள்ளது.

நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News