செய்திகள்

மெட்ரோ ரெயில் ஸ்மார்ட் கார்டில் மாநகர பஸ்சில் செல்லலாம்- விரைவில் அமல்படுத்த திட்டம்

Published On 2018-05-11 04:44 GMT   |   Update On 2018-05-11 04:44 GMT
மெட்ரோ ரெயில் ‘ஸ்மார்ட்’ கார்டில் மாநகர பஸ்சில் செல்லும் வசதி விரைவில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. #MetroTrain
சென்னை:

சென்னை மாநகர, போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-நேருபூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

பயணிகள் இடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவு படுத்தப்பட்டு வருகிறது.

நேருபூங்கா-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரையிலான பணிகள் நிறைவுபெற்றுள்ளதையொட்டி அடுத்தவாரம் ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் ஆய்வு நடத்துகிறார். வருகிற 14,15,16 ஆகிய 3 தினங்கள் இந்த ஆய்வு பணிகள் நடக்கிறது.

ஆய்வுபணிகள் முடிந்து பாதுகாப்பு கமி‌ஷனர் ஒப்புதல் அளித்ததும் சென்ட்ரல்-விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை நடைபெறும். பயணிகள் எளிதில் விமான நிலையத்துக்கு செல்ல முடியும்.


சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வழங்கப்படும் ‘ஸ்மார்ட்’ கார்டு மூலம் சென்னை மாநகர பஸ்களிலும் பயணம் செய்யும் வசதி விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. வாகன பார்க்கிங் கட்டணத்துக்கும், இந்த ‘ஸ்மார்ட்’ கார்டுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வு பணிகளில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர், மாநகர போக்குவரத்து கழகத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். மெட்ரோ-பஸ் பயணிகள் ‘ஸ்மார்ட் கார்டு’ வசதிகள் மூலம் பெரிதும் பயன் பெறுவார்கள். #MetroTrain
Tags:    

Similar News