செய்திகள்

உரிமையை மீட்போம்... எழுந்து வாடா- காலா பாடலில் அரசியல் விமர்சனம்

Published On 2018-05-10 10:20 GMT   |   Update On 2018-05-10 10:20 GMT
ரஜினியின் காலா படத்தில் அனல் தெறிக்கும் வரிகள் இடம் பெற்றிருப்பது அரசியல் களத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது. #Rajinikanth #Kaala
சென்னை:

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகும் முதல் படம் காலா என்பதால் அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட காலா பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்ப தொடங்கியுள்ளன. குறிப்பாக ரஜினி ரசிகர்கள் காலா பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு வருகிறார்கள்.

உரிமையை மீட்போம், தெருவிளக்கு என தொடங்கும் பாடல்களில் அரசியல் வரிகள் அதிகம் உள்ளன. தெருவிளக்கு பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.

சமூத்துவம் பிறந்திட... விடுதலை கிடைத்திட... தோழா இணைந்து போராடு. உணவு, ஆடை, வீடு போல வீடு போல கல்வியும் உனது அடிப்படை தேவை போன்ற வரிகள் கவனம் ஈர்க்கின்றன.

உரிமையை மீட்போம் பாடலில் இனியும் பயந்தால் ஆகாது என்பது போன்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. நிலமே எங்கள் உரிமை, யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா, இங்கே வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா, ‘அடங்கி வாழ்ந் தாக்க முடியாதம்மா, உரிமையை வாங்காம உயிர் போகுமா, எழுந்து வாடா, வாடா, எதிர்த்து நீ கேளுடா, பயந்தா ஆகாதுடா, இனமே உன் கூடடா’ என்பது போன்ற வரிகள் ரஜினியின் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளை ஊர்ஜித படுத்துவது போல உள்ளது.

போராடுவோம் பாடலில் தமிழகத்தில் சிலை வடிவமைப்பதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த கருத்துகளும் காரசாரமாக இடம் பெற்றுள்ளன.

‘காணிக்கை என்ற பெயரில் கல் சிலைக்கு லஞ்சம் கோடி, கோடியா குமியுது உண்டியலில். நாட்டில் ஆனா பஞ்சம். நிறத்தாலும் மதத்தாலும் பிரிந்துவிட்டோம். மனிதாபிமானத்தை மறந்து விட்டோம். உரிமை இழந்து விட்டோம். ஏழை உயிர் என்றால் அலட்சியம். பணம் தான் நோயின் மருத்துவம். நிலம், நீர் எங்கள் உரிமை. போராடுவோம், எங்கள் வறுமை ஒழிய போராடுவோம். புது புரட்சி உருவாக போராடுவோம்’ என்பது போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே அமைச்சர் ஜெயக்குமார் காலா பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது பாடல்கள் மூலம் கலகத்தை ஏற்படுத்த நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது காலா படம் வெளியாகும் முன்பே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Rajinikanth #Kaala
Tags:    

Similar News