செய்திகள்

மகளிடம் பணம் பெற்று ஏரிகளை தூர்வாரிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்

Published On 2018-04-22 17:51 GMT   |   Update On 2018-04-22 17:51 GMT
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகளிடம் பணம் பெற்று ஏரியை தூர்வாரினார்.
தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர், கடந்தாண்டு விளாங்குடியிலுள்ள பெரிய ஏரியை தூர்வாரி கொள்ள அனுமதி அளிக்குமாறு கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்தார். கலெக்டர் அனுமதி அளித்ததையடுத்து, இவர், அமெரிக்காவில் வசிக்கும் தனது மகள் ஆனந்தவள்ளி, மருமகன் அம்பலவாணன் அளித்த ரூ.3 லட்சத்து 70 ஆயிரம், ஏய்ம்ஸ் இண்டியா பவுன்டேசன் ப்ரம் அமெரிக்கா என்ற அமைப்பு கொடுத்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் செலவில் பெரிய ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தினார்.

இதேபோல் இந்த ஆண்டும் இவர், மகள் அளித்த ரூ.3 லட்சத்தை கொண்டு விளாங்குடியிலுள்ள கால்நடை மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிள்ளையார் ஏரி மற்றும் 2 ஏக்கர் பரப்பளவுள்ள வீரப்பிள்ளை குட்டை, ஏரிகளை தூர்வாரும் பணியை நேற்று முன்தினம் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இது குறித்து தியாகராஜன் கூறியதாவது:-

மூன்றாம் உலக போர் என்று ஒன்று வருமானால் நீருக்காக தான் வரும். எனவே ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்த அளவு நீரை சேமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற உடன் வீட்டில் உட்கார்ந்திருக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தனது மகளின் உதவியுடன் எனது கிராமத்தில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து தனது மகள் மற்றும் மருமகனுடன் விவாதித்த போது நல்ல முயற்சி என்றனர். மேலும் என்னை ஊக்குவித்ததுடன் பொருளாதார உதவியும் செய்தனர். மேலும் நீர் நிலைகளை தூர்வாருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்த வரையில் நீராதாரத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.  
Tags:    

Similar News