பள்ளிக்கரணை அருகே மீன் வியாபாரி வெட்டிக்கொலை
தாம்பரம்:
மேடவாக்கம், காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது52). மீன் வியாபாரி.
இன்று அதிகாலை அவர் வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றார். மேடவாக்கம கூட்டு ரோடு அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 2 மர்ம வாலிபர்கள் பின்னால் நடந்து வந்தனர். திடீரென அவர்கள் அரிவாளால் சீனிவாசனின் கழுத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்து அவ்வழியே நடைபயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். கொலை திட்டத்தை அரங்கேற்றிய வாலிபர் பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சீனிவாசன் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.சீனிவாசனுக்கு யாருடனும் மோதல் உள்ளதா? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
நடைபயிற்சி சென்ற மீன் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews