மதுராந்தகம் அருகே கார் இருக்கை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள சாத்தமை கிராமத்தில் கார் இருக்கை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இங்கு தயார் செய்யப்படும் கார் இருக்கைகள் உள்நாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள கழிவு பொருட்களை தொழிற் சாலையின் அருகே கொட்டி வைத்திருந்தனர். இதில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இப்பகுதியை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும்மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. நாச வேலை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.