செய்திகள்

அரியலூரில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2018-04-12 14:51 GMT   |   Update On 2018-04-12 14:51 GMT
வங்கி கட்டிடத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பி அறுத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:

அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. கடந்த 9-ந்தேதி காலை வழக்கம் போல் ஊழியர்கள் வங்கி கதவுகளை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வங்கி கட்டிடத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து வங்கி மேலாளர் அமுதன் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். 

இதைபார்த்த போலீசார் பொதுமக்களிடம் அந்த வாலிபர் குறித்து விசாரித்த போது அந்த வாலிபர் அப்பகுதியில் 2 நாட்களாக வந்து செல்வதாக கூறினர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை அழைத்த போது அவர் அங்கிருந்து ஓட தொடங்கினார். இதையடுத்து போலீசார் அவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது பெயர் செந்தில்குமார் (வயது 23) என்பதும், என்ஜினீயரிங் படித்துள்ளதும் தெரியவந்தது. மேலும் அவரது தந்தை வெங்கடேசன் போலீஸ் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், தான் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்பு கொண்டார். 

இதையடுத்து போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News