செய்திகள்

அரியலூரில் கோவிலுக்கு சென்று வந்த பெண்ணிடம் ரூ.4 லட்சம் நகை பறிப்பு

Published On 2018-04-11 11:47 GMT   |   Update On 2018-04-11 11:47 GMT
அரியலூரில் நடந்து சென்ற பெண்ணிடம் மயக்க பொடியை முகத்தில் தூவி ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை 2 பெண்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்:

அரியலூர் ரெயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் . இவர் இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 60). இவர் பூக்கார தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு , வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து நடந்து வந்த 2 பெண்கள், திடீரென தனலட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்ததோடு, அவர் மீது மயக்க பொடியை தூவியுள்ளனர். இதில் தனலட்சுமி மயங்கி கீழே விழவே, அவர் அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த போது செயின் காணாததை கண்டு தனலட்சுமி அதிர்ச்சியடைந்தார். மேலும் 2 பெண்கள் நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

இது குறித்து அவர் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி செயினை பறித்து சென்ற பெண்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News