செய்திகள்

கணவர் குடிப்பழக்கத்தை கைவிடாததால் பெண் தற்கொலை

Published On 2018-03-25 22:48 IST   |   Update On 2018-03-25 22:48:00 IST
கணவரின் குடிப்பழக்கத்துக்கு மனைவி பலியான சம்பவம் தக்கலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தக்கலை:

தக்கலை அருகே உள்ள புங்கரை காட்டுவிளையைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). இவரது மனைவி மோகினி (35). இவர் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். இவர்களுக்கு கணேஷ்குமார், கிஷோர் என 2 மகன்கள் உள்ளனர்.

சிவகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இங்கு வந்த பிறகு சிவகுமார் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி மோகினி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

குடிப்பழக்கத்தை கைவிடும்படி கணவரிடம் மோகினி கெஞ்சினார். ஆனால் அவர் குடிப்பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். இதில் மனம் உடைந்த மோகினி கடந்த 18-ந் தேதி தனக்கு தானே உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்த அவரது கணவர், மோகினியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

படுகாயங்களுடன் இருந்த மோகினியை மீட்டு ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகினி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவரின் குடிப்பழக்கத்துக்கு மனைவி பலியான சம்பவம் தக்கலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News