செய்திகள்

கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-03-21 16:05 IST   |   Update On 2018-03-21 16:05:00 IST
கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அடுத்த கோமாபுரம் அண்ணாநகரில் கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை சரிசெய்ய வேண்டும் என பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை கந்தர்வக்கோட்டை - திருச்சி சாலையில் கோமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கந்தர்வக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, மண்டல துணை தாசில்தார் ராமசாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews

Similar News