செய்திகள்

பெரிய தலைவர்கள் இல்லாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் - சரத்குமார்

Published On 2018-03-01 13:14 GMT   |   Update On 2018-03-01 13:14 GMT
தமிழகத்தில் பெரிய தலைவர்கள் இல்லாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என சரத்குமார் கூறினார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் ஜமீனுக்கு சொந்தான பெரிய கோவிலில் சரத்குமார் கதா நாயகனாக நடிக்கு பாம்பன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்றைய அரசியலே அரசியலாக உள்ளது. நடிகர் சங்கத்தை பற்றி எனக்கு தெரியாது என்றும் தான் உறுப்பினராக கூட இல்லை. ஒக்கி புயல் பாதிப்புக்கு மத்திய அரசு குறைந்த அளவு நிதி கொடுத்துள்ளது. பாதிப்பின் தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசு, மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தரவேண்டும்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மக்களுக்கு நல்லது தான். மக்களுக்கு யார் நல்லது செய்தால் என்ன? ஆனால் அவர்கள் அரசியலுக்கு எப்போது வரவேண்டும் என்று உள்ளது. தற்போது இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்ற கேள்விக்கு கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும், அவர்தான் என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றார். தமிழக அரசின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. தத்தளித்து கொண்டிருந்த கப்பலை சீரமைத்து கொண்டு செல்கின்றனர். அதற்கு நான் முதலில் பாராட்டுக்கள் தெரிவிக்கிறேன்.

மத்திய அரசுடன் மாநில அரசு அதிக இணக்கத்துடன் உள்ளது. நான் 21 ஆண்டு காலமாக அரசியலில் உள்ளேன். ஓய்வு பெற்று ஓய்ந்த பிறகு அரசியலுக்கு வரவில்லை வெற்றி படங்கள் தந்தபோதும், சூப்பர் ஸ்டாராக இருந்த போது அரசியலுக்கு வந்தேன். நேரம் வரும், காலம் வரும், நானும் ஆட்சி பொறுப்பில் வந்து அமருவேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி உடனிருந்தார்.
Tags:    

Similar News