செய்திகள்

ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Published On 2018-02-14 22:55 IST   |   Update On 2018-02-14 22:55:00 IST
ஜெயங்கொண்டத்தில் வீட்டு பாதை பிரச்சனையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாரியங்காவல்: 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 7-வது கிராசில், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான அண்ணாமலை (வயது 60) தனது மகன்களுடன் வசித்து வருகிறார். ஜெயங்கொண்டம்-தா.பழூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை இவர், வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த வீட்டுக்கு பாதை விடுவது சம்பந்தமாக, முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கும், அண்ணாமலைக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வருவாய்துறை அதிகாரிகளிடம் பலமுறை அண்ணாமலை மனு கொடுத்தும் உரிய தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் அந்த வீட்டின் அருகே கம்பி வேலி அமைப்பதற்கான பணிகள் நடந்ததால், தகவல் அறிந்த அண்ணாமலை தனது குடும்பத்துடன் அங்கு வந்து அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் மனமுடைந்த அவர், திடீரென மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர் வைத்திருந்த கேன், தீப்பெட்டியை பிடுங்கினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் அண்ணாமலையை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

Similar News