செய்திகள்
வேதாரண்யம் அருகே மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ ராட்சத கும்ப திருக்கை மீன்
வேதாரண்யம் அருகே மீனவர் வலையில் ஒரு ராட்சத கும்ப திருக்கை மீன் சிக்கியது. அனைத்து மீனவர்களும் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் மீன்பிடி சீசனையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகையை அடுத்த தரங்கம் பாடி பெருமாள் பேட்டையை சேர்ந்த செல்வம் என்ற மீனவர் பைபர் படகில் கோடியக்கரை பகுதியில் இருந்து நேற்று மாலை மீன்பிடிக்க சென்றார். அவர் இன்று காலை கரை திரும்பினார்.
அவரது வலையில் ஒரு ராட்சத கும்ப திருக்கை மீன் சிக்கியிருந்தது. 150 கிலோ எடை கொண்ட அந்த மீன் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதனால் மீனவர் செல்வம் மகிழ்ச்சியடைந்தார். அவரது வலையில் சிக்கிய கும்ப திருக்கை மீனை அனைத்து மீனவர்களும் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர்.