வேளாங்கண்ணியில் சுற்றுலா ஏஜெண்டு தூக்குபோட்டு தற்கொலை
நாகை:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா சேங்காளிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தங்கி அங்குள்ள தனியார் விடுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் ஏஜெண்டாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கடற்கரை அருகே உள்ள ஒரு தனியார் விடுதி அறையில் ஓய்வெடுப்பதாக சுரேஷ் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.