செய்திகள்

சோழிங்கநல்லூர் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி

Published On 2017-12-31 14:16 IST   |   Update On 2017-12-31 14:16:00 IST
சோழிங்கநல்லூர் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்:

பெருங்குடியை சேர்ந்தவர் மணிநாகப்பன். அதே பகுதியில் கேடிப் டெக்னாலஜி என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.

இவர் தனது நிறுவனத்துக்கு கனடா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்பு இருப்பதாக கூறி கல்லூரி முடித்து வெளிவரும் மாணவர்கள் மற்றும் வெளி நாட்டில் வேலை தேடுபவர்களை குறிவைத்து இணைய தளம் மூலம் தொடர்பு கொண்டார்.

இதனை நம்பிய திருவான்மியூரை சேர்ந்த என்ஜினீயர் அருண்குமார் என்பவர் மணிநாகப்பனை தொடர்பு கொண்டார்.

அப்போது லண்டனில் வேலை இருப்பதாகவும் இதற்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றும் மணி நாகப்பன் கூறினார். இதையடுத்து ரூ.1 லட்சத்தை அவரிடம் அருண்குமார் கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் மணிநாகப்பன் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. போலி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியது தெரிந்தது.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண்குமார் இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மணி நாகப்பன், வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

வேலை கேட்டு வருபவரிடம் முதலில் பணி ரெடியாகி விட்டது என்று கூறி பணத்தை பெற்று கொள்வதும் பின்னர் சில நாட்கள் கழித்து சான்றிதழ் சரியில்லை என்று கூறி ஏமாற்றி அலைக்கழித்து மோசடியில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

இதையடுத்து மணிநாகப்பனை போலீசார் கைது செய் தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News