விருத்தாசலத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நிஷா (30). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் நிஷா தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பின்னர் நிஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்ததகவல் நிஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே உறவினர்களுடன் நிஷாவின் பெற்றோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு நின்ற ஆம்புலன்ஸ் டிரைவரிடம் எங்களுக்கு தெரியாமல் பிணத்தை எப்படி? கொண்டு வரலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிஷாவின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நிஷாவின் பெற்றோர் எனது மகள் தற்கொலை செய்து கொள்ளமாட்டாள். அவள் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்.
உடனே போலீசார் நீங்கள் இதுகுறித்து போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் நிஷாவின் தந்தை நடேசன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.