செய்திகள்
தர்ஷினி

டெங்கு காய்ச்சல் பாதிப்பு - ஈரோடு மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 34 ஆனது

Published On 2017-10-21 16:03 IST   |   Update On 2017-10-21 16:03:00 IST
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பலர் பலியாகி வருகின்றனர். முக்கியமாக அந்தியூர், பவானி, சென்னிமலை பகுதிகளில் பலர் பலியாகி உள்ளனர். கடந்த 5-ந் தேதி வரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக இருந்தது.

ஈரோடு மாநகர பகுதியிலும் இந்த நோயின் தாக்கம் உள்ளது. ஈரோடு முத்தம்பாளையம் அவுசிங் யூனிட் அடுத்த ரெயில் நகரை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் ஷேக் ரிஸ்வானின் மனைவி சையது நிஷா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 6-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

கடந்த 11-ந் தேதி சென்னிமலை அருகே உள்ள வடமுகம் வெள்ளோடு சென்னிமலை பாளையம் புதூரை சேர்ந்த பூபதி மகள் மாரியம்மாள் (வயது 12) என்ற 6-ம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

12-ந் தேதி புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காராப்பட்டி புதுக்காலனியை சேர்ந்த துரைசாமி மகள் ரச்சனா (5) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

கடந்த 13-ந் தேதி கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த விவேகானந்தன் மகள் அனுஸ்ரீ என்ற சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியானாள்.

கடந்த 16-ந் தேதி கோபி அருகே உள்ள பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சரவணனின் மகள் எம்.பி.ஏ. பட்டதாரியான பிரியா (23) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

அதே நாளில் தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரத்தை சேர்ந்த மாதே கவுடாவின் மனைவி சண்ணம்மா (50) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக இருந்தது.

இந்த நிலையில் நேற்று அந்தியூர் அருகே சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். அந்தியூர் அடுத்துள்ள சின்னத் தம்பி பாளையம் அந்தியூர் காலனியை சேர்ந்த துரை சாமியின் மகள் தர்ஷினி (7).

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் குணமாகாததால் ஈரோட்டில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தர்ஷினி பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஈரோடு மாவட் டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.



Similar News