செய்திகள்
கடலூர் டவுன்ஹாலில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசிய போது எடுத்த படம்.

தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி சிறை நிரப்பும் போராட்டம்: கி.வீரமணி

Published On 2017-10-21 10:16 GMT   |   Update On 2017-10-21 10:16 GMT
தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வலியுறுத்தி விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என கி.வீரமணி கூறினார்.
கடலூர்:

கடலூர் டவுன் ஹாலில் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர். ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் இதற்கு ஆதரவு அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வழியில் நடந்து வரும் இந்த ஆட்சியில் இதற்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. ஆனால், கேரள மாநிலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகி உள்ளனர்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வலியுறுத்தி விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.


தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. மத்திய அரசுக்கு நீட் தேர்வை கொண்டு வர அனுமதி இல்லை. மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. சினிமா துறையினர் பெற்றிருக்கும், புகழையும், பெயரையும் கொண்டு தமிழகத்தில் முதல்வராகி விடலாம் என கூறுகிறார்கள். இதில் மக்கள் ஏமாறக்கூடாது.

ஏனென்றால் தமிழகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜோதிடப்பாடம் நடத்தப்படுகிறது. அதை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது செயலவை தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News