செய்திகள்

அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: மகன் கண் முன் தாய் பலி

Published On 2017-10-16 11:25 GMT   |   Update On 2017-10-16 11:25 GMT
அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மகன் கண் முன் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அம்மாபேட்டை:

ஈரோடு கருங்கல்பாளையயம் வைராபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜீ. இவரது மனைவி சரோஜா (வயது 50). இவர்களது மகன் சுரேஷ் (30).

சரோஜா அவரது மகன் சுரேஷ் இருவரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடத்துக்கு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சுரேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அவரது அம்மா சரோஜா அவரது பின்னால் அமர்ந்திருந்தார்.

ஒலகடம் காந்தி சிலை அருகே வந்தனர். அப்போது அந்த வழியாக பட்லூரில் இருந்து பவானி நோக்கி வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பின் பகுதியில் அமர்ந்திருந்த சரோஜா தவறி கீழே விழுந்தார்.

இதில் அவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சுரேஷ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News