செய்திகள்

திட்டக்குடி அருகே இளம்பெண்ணை தாக்கி 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2017-10-13 20:03 IST   |   Update On 2017-10-13 20:03:00 IST
திட்டக்குடி அருகே இளம்பெண்ணை தாக்கி 4 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பறித்து சென்றனர்.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேஉள்ள கோழியூர் பகுதியை சேர்ந்தவர் ரஜித்குமார். இவரது மனைவி இந்திரா( வயது27). இவர் நேற்று மாலை மொபட்டில் வையங்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

அப்போது 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். கோடயங்குடி என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளை திடீரென்று இந்திரா ஓட்டி வந்த மொபட் மீது மோதினர். இதில் இந்திரா கீழே விழுந்தார். அப்போது அந்த வாலிபர்கள் இந்திரா கழுத்தில் கிடந்த தாலிசெயினை பறிக்க முயன்றனர்.

இந்திரா அதனை தடுக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர்கள் இந்திராவை தாக்கி விட்டு கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

வாலிபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் இந்திரா கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பெண்ணை தாக்கி நகை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

Similar News