சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22½ லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகள், வெளிநாட்டு பணம் கடத்தி செல்வதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பன்னாட்டு விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இலங்கை செல்வதற்காக சென்னையைச் சேர்ந்த முகமது அசாருதீன், சாதிக் உள்பட 8 பேர் மொத்தமாக வந்தனர்.
சந்தேகம் அடைந்த அவர்கள் 8 பேரையும் தனித் தனியாக அழைத்து விசாரித்தனர். அவர்களது சூட்கேசை சோதனை செய்தபோது கட்டு கட்டாக அமெரிக்க டாலர், யூரோ பணம் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 22½ லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்தனர். வெளிநாட்டு பணம் யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து 8 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த பழனிகுமாரை தனியாக அழைத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் ¼ கிலோ தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து பழனிகுமாரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.