செய்திகள்

செங்கல்பட்டில் மளிகை கடை ஊழியர் அடித்துக் கொலை

Published On 2017-10-12 14:01 IST   |   Update On 2017-10-12 14:01:00 IST
செங்கல்பட்டில் மளிகை கடை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

புதுக்கோட்டை மாவட்டம் காரையூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 26). இவர் செங்கல்பட்டு டவுன் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

செங்கல்பட்டு டவுன் கோகுலாபுரத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவருடன் அதே மளிகை கடையில் வேலை பார்க்கும் நண்பர்களும் தங்கியிருந்தனர்.

கடந்த 5-ந்தேதி இரவு ரமேஷ்குமாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் சிகிச்சை பெறுவதற்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் குமார் தான் தங்கியிருந்த அறையில் வந்து படுத்துக்கொண்டார்.

இதற்கிடையே மளிகை கடையில் இருந்து அறைக்கு திரும்பிய நண்பர்கள் ரமேஷ்குமார் காயங்களுடன் கிடப்பதை பார்த்து உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரமேஷ் குமாரை அடித்து கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News