செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே பா.ம.க. மாநாட்டுக்கு சென்ற வேன் கண்ணாடி உடைப்பு - போலீசார் விசாரணை

Published On 2017-09-18 20:49 IST   |   Update On 2017-09-18 20:49:00 IST
நெல்லிக்குப்பம் அருகே பா.ம.க. மாநாட்டுக்கு சென்ற வேனின் கண்ணாடி உடைத்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லிக்குப்பம்:

விழுப்புரத்தில் பா.ம.க. சமூகநீதி மாநாடு நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதற்கு கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் வில்லியா நல்லூர் பகுதியில் இருந்து பா.ம.க.வினர் வேனில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அந்த வேனை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களால் வேனின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர் வேனில் இருந்து கீழே இறங்கி அவர்களை பிடிக்க ஓடினர். ஆனால், அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் வேனை தாக்கி தப்பி ஓட முயன்ற 3 பேரை பிடித்தனர். பின்னர் போலீசார் பா.ம.க.வினரை சமாதானம் செய்தனர்.

இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த 3 நபர்கள் யார்? எதற்காக வேனின் கண்ணாடிகளை உடைத்தனர்? என்று விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News