தரங்கம்பாடி கடற்கரையில் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைக்கு ஏராளமான காதல் ஜோடிகள் வந்து செல்கின்றன. விடுமுறை நாட்கள் என்றால் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் தரங்கம்பாடி கடற்கரைக்கு மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 3 காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் மறைவான பாறை இடுக்குகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வாலிபர்கள் 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் காதல் ஜோடிகளை மிரட்டினர். இதனால் 2 காதல் ஜோடி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ஒரு காதல் ஜோடியை மடக்கி பிடித்த அக்கும்பல் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்து படம் எடுத்தனர். இதனை பெற்றோரிடம் காண்பித்து விடுவோம் என மிரட்டினர். பின்னர் காதல் ஜோடியிடம் இருந்து பணம், நகையை பறித்தனர். மேலும் அப்பெண்ணை சில்மிஷம் செய்ததாவும் கூறப்படுகிறது. இது குறித்து காதலன் தனிப்பிரிவு போலீஸ் சரவணபவனுக்கு தகவல் கொடுத்தார்.
இது தொடர்பாக பொறையாறு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் தரங்கம்பாடி கடற்கரைக்கு விரைந்து சென்றனர். அங்கு காதல் ஜோடியை மிரட்டிய பூம்புகார் அருகே உள்ள சந்திரபாடி மீனவ கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகன் ரஞ்சித் (24), அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (24), ஆக்கூர் முக்கூட்டு பரமேஸ்வரன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பெருமாள் பேட்டை, தரங்கம்பாடியை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம், நகை பறிப்பது, சில பெண்களை சில்மிஷம், செய்வது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
ஆனால் காதல் ஜோடிகள் இது வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி போலீசில் புகார் கொடுப்பதில்லை.இதனை பயன்படுத்தி வாலிபர்கள் அத்து மீறி நடந்து கொள்கிறார்கள். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.