நம்பியூர் அருகே தொழில் அதிபர் விபத்தில் பலி
நம்பியூர்:
நம்பியூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னமணி என்கிற சிதம்பர மூர்த்தி (வயது 45). இவர் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இன்று காலை சிதம்பர மூர்த்தி வேலை விஷயமாக தனது மொபட்டில் சென்றார். நம்பியூர் அருகே உள்ள கொன்னமடை பாலம் அருகே சென்ற போது எதிரே தனியார் ஸ்பின்னிங் மில் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
எதிர் பாராத விதமாக வேன் எதிரே வந்த மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் சிதம்பர மூர்த்திக்கு தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து நடந்ததும் வேன் டிரைவர் வேனில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடி விட்டார்.
இந்த விபத்து குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காயத்ரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.