செய்திகள்

தாளவாடி அருகே கரும்பு வெட்டிய 2 தொழிலாளியை சிறுத்தை கடித்து குதறியது

Published On 2017-09-07 15:41 GMT   |   Update On 2017-09-07 15:41 GMT
பட்டப்பகலில் காட்டை விட்டு தோட்டத்துக்குள் புகுந்து 2 தொழிலாளர்களை சிறுத்தை கடித்து குதறிய சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே உள்ள எல்லக்கட்டை சேர்ந்தவர் செல்வமணி விவசாயி. இவரது தோட்டத்தில் கரும்புகள் வெட்டும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை நடந்து வந்தது. இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யுவராஜ் (வயது 30), சித்தராஜ் (34) ஆகிய 2 தொழிலாளிகளும் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த கரும்பு தோட்டத்தை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டதாகும். அப்போது அங்குள்ள ஒரு புதரில் பதுங்கி இருந்த ஒரு சிறுத்தை திடீரென யுவராஜ் மற்றும் சித்தராஜ் ஆகிய இருவர் மீதும் பாய்ந்து கடித்து குதறியது.

இதில் அவர்கள் 2 பேரும் ரத்தம் சொட்டச்..சொட்ட கூக்குரலிட்டனர். இதை கண்டு அருகே கரும்பு வெட்டிக் கொண்டிருந்த சக தொழிலாளிகள் அங்கு அரிவாள் கத்தியுடன் ஓடி வந்தனர்.

அங்கு 2 பேரை தாக்கி கொண்டிருந்த சிறுத்தையை கூச்சலிட்டு விரட்டினர். இதை கண்ட அந்த சிறுத்தை பயந்து அங்கிருந்து பாய்ந்து காட்டுக்குள் புகுந்தது.

சிறுத்தை கடித்து தாக்கியதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு உடனடியாக தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்டப்பகலில் காட்டை விட்டு தோட்டத்துக்குள் புகுந்து 2 தொழிலாளர்களை சிறுத்தை கடித்து குதறிய சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தை புகுந்து தாக்குதல் நடத்திய இடத்தை சத்தியமங்கலம் வன ஊழியர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அங்கு கூடி இருந்த வனப்பகுதி மக்களிடம் சம்பவத்தை கேட்டறிந்த வனத்துறையினர் காட்டு பகுதிக்கோ, காட்டையொட்டி உள்ள தோட்டப் பகுதிக்கோ போகும்போது தனியாக போக வேண்டாம் என்றும் குறிப்பாக இரவு நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறினர்.
Tags:    

Similar News