செய்திகள்

அத்தாணி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2017-09-04 16:23 IST   |   Update On 2017-09-04 16:23:00 IST
அத்தாணி அருகே நோய் குணமாகாததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆப்பக்கூடல்:

அத்தாணி அருகே உள்ள குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் ஷோபனா (வயது 20). இவர் கோபி அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு அவர் வீட்டில் படுத்திருந்தார்.

திடீரென அவரது பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது ஷோபனாவை காணவில்லை. அந்த பகுதியில் பெற்றோர் அவரை தேடி பார்த்தனர்.

தோழிகள், உறவினர்கள் வீடுகளுக்கும் தொடர்பு கொண்டு கேட்டனர். ஆனால் ஷோபனாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இரவு முழுவதும் தேடி பார்த்தும் ஷோபனா கிடைக்காததால் பெற்றோர் பயத்தில் இருந்தனர். இன்று காலை வீட்டில் உள்ள கிணற்றுப்பகுதிக்கு ஒருவர் சென்றார்.

எதேச்சையாக கிணற்றுக்குள் பார்த்தபோது உள்ளே ஷோபனா பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்து ஷோபனாவின் பிணம் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஷோபனாவுக்கு நோய் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதும், ஆனாலும் நோய் குணமடையவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த ஷோபனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேறு ஏதும் காரணம் உண்டா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுததி உள்ளது.

Similar News