செய்திகள்

அம்மாபேட்டை அருகே வேன்-மொபட் மோதி பெண் பலி

Published On 2017-09-03 18:51 IST   |   Update On 2017-09-03 18:51:00 IST
அம்மாபேட்டை அருகே வேன்-மொபட் மோதிய விபத்தில் கணவர் கண் முன்பு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை மணியக்கார வீதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 64). விவசாயி. இவரது மனைவி மாதம்மாள் (60). இவர்கள் 2 பேரும் இன்று காலை மொபட்டில் நெரிஞ்சிப்பேட்டைக்கு சென்றனர். அங்குள்ள கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றி விட்டு திரும்பினர்.

மேட்டூர்-பவானி மெயின் ரோட்டில் அவர்கள் ஏறினர். அப்போது மேட்டூர் பகுதியில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த வேனும், மொபட்டும் மோதிக்கொண்டன.

இதில் மாதையனும், மாதம்மாளும் தூக்கி வீசப்பட்டனர். மாதம்மாள் அதே இடத்தில் கணவர் கண் முன்பு பரிதாபமாக இறந்தார். மாதையனின் வலது காலில் முறிவு ஏற்பட்டு பலத்த காயத்துடன் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மாதையன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News