செய்திகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2017-08-31 11:57 IST   |   Update On 2017-08-31 11:58:00 IST
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக சென்னையில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் மாலை மற்றும் இரவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதேபோல் நேற்று இரவு சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி இன்று காலை நிலவரப்படி ஏரியில் 177 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது. 193 கனஅடி தண்ணீர் வருகிறது.

20 கனஅடி தண்ணீர் சென்னை குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 15 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரிக்கு வந்துள்ளது.

பூண்டி ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே சென்னை குடிநீருக்காக தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது. நீர் இல்லாமல் ஏரி முழுவதும் வறண்டு கிடந்தது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஏரியில் 27 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231) ஏரிக்கு 36 கனஅடி தண்ணீர் வருகிறது. மழை நீடிக்கும் பட்சத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் வறண்டு கிடந்த புழல் ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி. இன்று நிலவரப்படி 79 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுறது.

சோழவரம் ஏரியில் 22 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. 12 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கனஅடி.

கடந்த ஒரு மாதத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. கடந்த 1-ந் தேதி ஏரியின் நீர்மட்டம் 83 மில்லியன் கனஅடியாக இருந்தது. தற்போது 177 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. மழை காரணமாக ஒரு மாதத்தில் 94 மில்லியன் கனஅடி தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்துள்ளது.

Similar News