செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி

Published On 2017-07-22 11:46 GMT   |   Update On 2017-07-22 11:47 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே நடந்து சென்ற விவசாயி மீது டிராக்டர் மோதியது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீமுஷ்ணம்:

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 66) விவசாயி. இவர் தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அதேப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

சந்தைதோப்பு அருகே உள்ள பாளையங்கோட்டை-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் நாராயணசாமி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக மண் லோடு ஏற்றி கொண்டு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற நாராயணசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாராயணசாமி தலையில் அடிப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நாராயணசாமி பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News