செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட 1 கிலோ 140 கிராம் எடை கொண்ட தங்கம்.

துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்

Published On 2017-07-06 10:16 IST   |   Update On 2017-07-06 10:17:00 IST
துபாயில் இருந்து ரூ.32 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பேரை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை துபாயில் இருந்து ஏர்ஏசியா விமானம் திருச்சி வந்தது. அதிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கி வந்தனர். அப்போது வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த கேரளாவை சேர்ந்த அபு பக்கர், வாசிம் கல்ப் ஆகியோரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை போட்டனர். இதில் அவர்கள் துபாயில் இருந்து ஆடைகளுக்குள் தகடாக மாற்றி மறைத்து கடத்தி வந்த 1 கிலோ 140 கிராம் எடை கொண்ட தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.


அவற்றின் மதிப்பு ரூ.33 லட்சம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் 29-ந்தேதி திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சாதிக் அலி என்பவர் மலேசியாவில் இருந்து 1½ கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது பிடிபட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த திருச்சி விமான நிலைய குடியுரிமை அதிகாரி பாலாஜி பாஸ்கரும் கைதானார். பின்னர் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News