செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாத நிறுவனங்கள் - ஓட்டல்கள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

Published On 2017-06-20 17:12 GMT   |   Update On 2017-06-20 17:12 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாத நிறுவனங்கள் மற்றும் ஒட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி:

இது குறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட அறிக்கை: உணவு நிறுவனங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வந்த உரிமத்தை தற்போது உணவு பாதுகாப்புத்துறையே வழங்குகிறது. ஏற்கனவே உணவு வியாபாரிகளுக்கு பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதியகால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது.

தங்கள் நிறுவனம் மற்றும் வாகன விபரங்களை தங்கள் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது மாவட்ட நியமன அலுவலரிடமோ பதிவு அல்லது உரிமம் பெற தொடர்பு கொள்ளலாம். அபராதம் மற்றும் தண்டனை இன்றி உடனடியாக பதிவு அல்லது உரிமம் பெறவேண்டியது ஒவ்வொரு உணவு வியாபாரியின் கடமை மற்றும் கட்டாயமாகும்.

இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14 ஆயிரம் உணவு வணிகர்களுக்கு மேல் உள்ளனர். கடந்த ஆண்டில் உணவுப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு 802 உரிமமும் 6854 பதிவு சான்றிதழும் கிருஷ்ணகிரி உணவு பாதுகாப்பு துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 61 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் பாதுகாப்பற்ற, தரக்குறைவான மற்றும் தப்புக்குறியீடு உள்ள உணவுப் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது 61 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனையும் அபராதத் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 750ஐ அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி பொதுமக்களும், நுகர்வோர்களும், மாணவ மாணவிகளும் தங்களது உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களை (வாட்ஸ்அப்) எண்:9444042322 வாயிலாக தெரிவிக்கலாம். இவ்வாறு தனது அறிக்கையில் கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News