சிவகங்கை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டிவதைத்தது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.
சிவகங்கை நகரில் மாலை 5 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை, சிறிது நேரத்தில் மிதமாக பெய்தது. 2 மணி நேரம் பெய்த தொடர் மழை காரணமாக நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது.
வெயில் வாட்டிவதைத்த நிலையில் திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் காளையார் கோவில், மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.
திருப்பத்தூரில் மழை பெய்ததால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்தடையும் ஏற்பட்டது. கோடைமழை தமிழகம் முழுவதும் பெய்துவரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தை ஏமாற்றி வந்த மழை திடீரென பெய்ததையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை நகரில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து காற்று வீசியது. நகரில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மழை வரும் எனறு எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதேநேரம் புறநகர் பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது.