செய்திகள்

நாகையில் மீனவரை வெட்டிக்கொலை செய்த 3 பேர் கைது

Published On 2017-05-21 18:05 IST   |   Update On 2017-05-21 18:05:00 IST
நாகையில் மீனவரை வெட்டிக்கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்:

நாகை காடம்பாடி மகாலட்சுமிநகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நேசமணி (வயது21). இவருடைய மனைவி வினிதா. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சொக்கத்தங்கம் மனைவி சத்தியாவும், வினிதாவும் தோழிகள். இவர்கள் எங்கு போனாலும் ஒன்றாக சென்று வந்துள்ளனர். இது நேசமணிக்கு பிடிக்காததால், சத்தியாவுடன் வெளியில் செல்லக்கூடாது என்று மனைவியை கண்டித்தார். இதனால் வினிதா, சத்தியாவுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார்.

இது குறித்து சத்தியா தனது குடும்ப நண்பரான அதே பகுதியை சேர்ந்த மீனவரான கவியரசன் (35) என்பவரிடம் தெரிவித்தார். இதைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியாவுடன், வினிதாவை ஏன் பழக கூடாது என கண்டிக்கிறாய் என்று கேட்டு கவியரசன், நேசமணியிடம் தகராறு செய்தார். இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவியரசனுக்கும், நேசமணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து கவியரசன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நேசமணி, அவருடைய அண்ணன் ரூபன் (23) மற்றும் நண்பர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் சண்முகம் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து கவியரசனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கவியரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவியரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பியான நேசமணி, ரூபன் மற்றும் சண்முகம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News