செய்திகள்

புதுக்கோட்டை அருகே கோவில் விழாவில் விவசாயி வெட்டிக்கொலை

Published On 2017-05-13 13:34 IST   |   Update On 2017-05-13 13:34:00 IST
புதுக்கோட்டை அருகே கோவில் விழாவில் விவசாயி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கூத்தனிபட்டி கோவிலில் சித்ராபவுர்ணமி தினத்தன்று அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி செல்லத்துரை ,அவரது அண்ணன் முருகேசன் ஆகிய 2 பேரையும் அழைக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் மது போதையில் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரனிடம் புகார் செய்தனர். அவர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சதீஷ் உள்பட 5பேர் சேர்ந்து 2பேரையும் தட்டிக் கேட்டனர். இதில் வாக்குவாதம் முற்றவே செல்லத்துரை அரிவாளால் வெட்டப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் செல்லத்துரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News