செய்திகள்

சங்கரன்கோவில் அருகே இடத்தகராறில் தந்தை-மகன் வெட்டிக்கொலை

Published On 2017-04-06 08:56 GMT   |   Update On 2017-04-06 08:56 GMT
சங்கரன்கோவில் அருகே இடத்தகராறில் தந்தை-மகன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் திரைசங்கம் (வயது 70). இவருக்கும் இவரது அண்ணன் இன்னாசிக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இன்னாசியின் மகன் பிலவேந்திரன்(30) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். அப்போது இடப்பிரச்சினை தொடர்பாக தனது குடும்பத்தினரிடம் பிலவேந்திரன் கேட்டு அறிந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பிலவேந்திரன் அரிவாளுடன் திரைசங்கம் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த திரைசங்கத்திடம் பிலவேந்திரன் இடப் பிரச்சினை தொடர்பாக தகராறு செய்தார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பிலவேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திரைசங்கத்தை சரமாரியாக வெட்டினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திரைசங்கத்தின் மகன் பூசைபாண்டி(37) ஓடி வந்து பிலவேந்திரனை தடுத்தார். அப்போது மேலும் ஆத்திரமடைந்த பிலவேந்திரன் பூசை பாண்டியையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அரிவாள் வெட்டில் தலை,கை,வயிறு பகுதியில் பலத்த வெட்டுக்காயமடைந்த தந்தை-மகன் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். கொலை செய்யப்பட்ட தந்தை-மகன் இருவருடைய உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் இருவரது உடல்களையும் அய்யாபுரம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான பிலவேந்திரணை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே பிலவேந்திரனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் முத்து பிரேம் சந்த், அருள் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Similar News