செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2017-04-06 09:07 IST   |   Update On 2017-04-06 09:07:00 IST
பண வினியோக புகார் தொடர்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பண வினியோகமும், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன் உச்சக்கட்டமாக பணம் வழங்குவதில் ஏற்பட்ட மோதலில் தி.மு.க.வினர் இருவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்தொகுதியில் பணம் வெள்ளமாக பாய்கிறது.

ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் தினகரன், பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோர் போட்டிபோட்டுக் கொண்டு பணம் வழங்குவதாலும், அனைத்து வேட்பாளர்களும் தங்களுக்காக தேர்தல் பணி செய்ய வெளியூரில் இருந்து பல்லாயிரக்கணக்கானோரை இறக்குமதி செய்திருப்பதாலும் தொகுதியில் எந்நேரமும் வன்முறை வெடிக்கும் நிலை நிலவுகிறது.

தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் பொதுத்தேர்தலை ஒத்திவைப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அதைவிட 100 மடங்கு அதிக காரணங்கள் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு உள்ளன. உலகத் தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில், இந்த இடைத்தேர்தலில் மட்டும் ரூ.600 கோடி பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாக வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை இந்தியத்தேர்தல் ஆணையம் ஒத்திவைக்க வேண்டும். இந்த தாக்கம் நீங்கிய பிறகு வெளிமாநில அதிகாரிகள், மத்தியப் படைகளை கொண்டு சுதந்திரமான முறையில் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்த ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Similar News