செய்திகள்

துபாயில் இருந்து சென்னைக்கு 3 கிலோ தங்க கட்டிகள் கடத்தல்: 2 வாலிபர்கள் கைது

Published On 2017-04-03 08:00 IST   |   Update On 2017-04-03 08:00:00 IST
துபாயில் இருந்து சென்னைக்கு ‘எமர்ஜென்சி’ விளக்குகளில் மறைத்து கடத்தி வந்த 3½ கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த அருள்பீட்டர் தோஷ்வா (வயது 30), சிவகங்கையை சேர்ந்த ராஜசேகர் (32) ஆகியோர் சுற்றுலா விசாவில் துபாய்க்கு சென்று விட்டு திரும்பி வந்திருந்தனர்.

அவர்கள் இருவர் மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் 2 பேரையும் நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணாகவே பேசினர். உடனே சுங்க இலாகா அதிகாரிகள் 2 பேரின் உடமைகளையும் சோதனை செய்தனர்.

அப்போது அவர்களிடம் 4 ‘எமர்ஜென்சி’ விளக்குகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து 3½ கிலோ எடை கொண்ட 30 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1 கோடியே 5 லட்சம் ஆகும்.

இதையடுத்து அருள்பீட்டர்தோஷ்வா, ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவர்கள் இருவரும் யாருக்காக தங்க கட்டிகளை துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News