செய்திகள்

கேளம்பாக்கம் அருகே கணவன்-மனைவி தற்கொலை: 6 வருடம் பிரிந்து வாழ்ந்தவர்கள்

Published On 2017-04-02 15:51 IST   |   Update On 2017-04-02 15:51:00 IST
கேளம்பாக்கம் அருகே 6 வருடம் பிரிந்து வாழ்ந்த கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்போரூர்:

கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கம் பாரதியார் தெருவில் வசித்து வந்தவர் தேவேந்திரன் (வயது45). வெல்டிங் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா (40).

இவர்களுக்கு ஒருமகளும், 2 மகன்களும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். தேவேந்திரனுடன் ஒரு மகனும், வெண்ணிலாவுடன் மற்ற இருவரும் வசித்து வருகிறார்கள். வெண்ணிலா காரப்பாக்கத்தில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு தேவேந்திரனின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார்.

அப்போது அறையில் தேவேந்திரன் தூக்குபோட்டு தற்கொலை செய்திருந்தார். அருகே அவரது மனைவி வெண்ணிலா வாயில் துரை தள்ளியபடி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீட்டின் அறைக் கதவை உடைத்து தேவேந்திரன், வெண்ணிலா உடலை மீட்டனர்.

விசாரணையில் 6 வருடமாக பிரிந்திருந்த கணவன்- மனைவி இருவரும் வீட்டில் நேற்று சந்தித்து உள்ளனர். அப்போதும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே தேவேந்திரன், வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து கணவன்- மனைவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News