செய்திகள்

காஞ்சீபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தண்ணீர் தொட்டி மீது ஏறி மாணவர்கள் போராட்டம்

Published On 2017-03-30 12:49 IST   |   Update On 2017-03-30 12:49:00 IST
காஞ்சீபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தண்ணீர் தொட்டி மீது ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சீபுரம்:

டெல்லியில் இரு வாரங்களுக்கு மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாணவர்கள் அமைப்பினரின் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மத்திய அரசினை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். அப்போது எதிர் பாராதவிதமாக அரிகிருஷ்ணன் என்பவர் திடீரென பஸ்நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று கோ‌ஷங்களை எழுப்பினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்களும் தண்ணீர் தொட்டியின் மீது ஏறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பிற்காக அங்கிருந்த போலீசார் தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் தொட்டி மீது நின்று கொண்டிருந்த லோகேஷ், தேவராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Similar News