செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் “ஹவாலா” பணம் ரூ.55 லட்சம் சிக்கியது - 3 பேர் கைது

Published On 2017-03-21 13:37 IST   |   Update On 2017-03-21 13:37:00 IST
சென்னை விமான நிலையத்தில் “ஹவாலா” பணம் ரூ.55 லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
தாம்பரம்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று இரவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிங்கப்பூர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளை தீவிர சோதனை செய்தனர்.

நள்ளிரவு 1.30 மணிக்கு சிங்கப்பூர் புறப்படும் விமானத்தில் ஏற வந்த சென்னையைச் சேர்ந்த அப்துல்சலாம், அப்துல் ரசாக் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் சிங்கப்பூர் செல்ல சுற்றுலா விசா இருந்தது.

அவர்கள் வைத்திருந்த அட்டை பெட்டியை சோதனை செய்தபோது முறுக்கு, மிக்சர் பாக்கெட்டுகள் இருந்தன. அவைகளை உடைத்து பார்த்தபோது அமெரிக்க டாலர், யூரோ பணம் இருந்தன. இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும். இருவரும் வெளிநாட்டு பணத்தை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல். ராமநாதபுரத்தைச் சேர்ந்த கான் என்பவர் சிங்கப்பூர் செல்ல வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

இதில் அவர் உள்ளாடையில் யூரோ பணத்தை மறைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள யூரோ கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

3 பேரும் சிங்கப்பூரில் உள்ள ஒருவரிடம் வெளிநாட்டு பணத்தை கொடுக்க சென்றது தெரிய வந்தது. இவர்களிடம் பணத்தை கொடுத்து அனுப்பியது யார் என்று விசாரித்து வருகிறார்கள்.

Similar News