செய்திகள்

சிவகங்கையில் வக்கீல் கொலையில் 2 பேரிடம் விசாரணை

Published On 2017-03-17 16:13 IST   |   Update On 2017-03-17 16:13:00 IST
வக்கீல் கொலையில் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் வக்கீல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் வக்கீல் பில்லப்பன் (வயது 48). இவருக்கு கவுரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பல்வேறு கொலை வழக்கு தொடர்பாக பில்லப்பன் ஆஜராகி வாதாடி வந்தார்.

நேற்று மதியம் பில்லப்பன் திடீரென மாயமானார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பில்லப்பன், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தணிகைவேல், துணை சூப்பிரண்டு மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பில்லப்பன், இறந்த வீடு, கைதாகி சிறையில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது ஆகும்.

கொலை குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்திரவின்பேரில் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று உள்ளனர்.

பில்லப்பன் பல கொலை வழக்குகளில் ஆஜராகி ஜாமின் பெற்று கொடுத்துள்ளனர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் முன் விரோதத்தில் கொலை செய்தனரா? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக காளையார்கோவிலைச் சேர்ந்த அய்யப்பன், மகேஷ் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் வக்கீல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News