செய்திகள்

ஜனாதிபதி இன்று வருகை: சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை

Published On 2017-03-02 08:47 IST   |   Update On 2017-03-02 08:47:00 IST
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருவதால் அவர் பயணம் செய்ய உள்ள இடங்கள், பாதைகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
ஆலந்தூர்:

சென்னை தாம்பரம் விமானப்படை விழா, அடையாறில் இந்திய பெண்கள் விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (வியாழக்கிழமை) இரவு தனி விமானத்தில் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.



விமான நிலையத்தில் வரவேற்பு முடிந்ததும் ஜனாதிபதி, குண்டு துளைக்காத காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை சென்று இரவு தங்குகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) கவர்னர் மாளிகையில் இருந்து காரில் தாம்பரம் விமான படை தளத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அடையாறில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து பழைய விமான நிலையம் சென்று தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதையொட்டி நேற்று சென்னையில் ஜனாதிபதி பயணம் செய்ய உள்ள இடங்கள், பாதைகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகை, அங்கிருந்து தாம்பரம் விமானப்படை தளம், அங்கிருந்து அடையாறு, அங்கிருந்து மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கு என ஜனாதிபதியின் மாதிரி கார் ஒன்றை ஓட்டிச்சென்று அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது.


Similar News