செய்திகள்

பஸ் மீது மோதியதால் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து வாலிபர் கருகி பலி

Published On 2017-02-25 12:37 IST   |   Update On 2017-02-25 12:36:00 IST
பஸ் மீது மோதியதால் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து வாலிபர் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நாடார் சங்க கட்டிடம் அருகே இன்று காலை 6 மணிக்கு புதுவை அரசு பஸ் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர்.

அப்போது எதிரே 4 வாலிபர்கள் ரேஸ் பைக்கில் வேகமாக வந்தனர். அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வருவதை பார்த்த டிரைவர் விநாயக மூர்த்தி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பைக் பஸ்சின் முன்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் அடியில் சிக்கிய அந்த பைக் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஸ்சிலும் தீப்பிடித்தது.

பின்னால் வந்த மற்ற பைக்குகளும் மோதி வாலிபர்கள் கீழே விழுந்தனர். தீபிடித்த பைக்கை ஓட்டி வந்த சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த விஜய் ஸ்ரீ ரக்‌ஷன் (வயது 28) என்பவர் உடல் கருகினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மற்ற வாலிபர்கள் படுகாயம் அடைந்து ரோட்டில் கிடந்தனர். பஸ்சின் முன் பகுதி தீப்பிடித்து எரிவதை கண்டதும் பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பஸ், மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான விஜய் ஸ்ரீ ரக்‌ஷன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த டியோட்டர் உள்பட 3 பேரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயம் அடைந்தவர்களில் மாரி என்பவர் பஸ்சின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த போது விபத்தில் சிக்கியதும் தெரிகிறது. பைக் ரேசில் வேகமாக வந்த போது பஸ்சில் மோதி விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பலியான விஜய் ஸ்ரீ ரக்‌ஷன் சென்னை தரமணியில் உள்ள ஒரு கால் சென்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடுகிறார்கள். போலீசார் கடுமையாக எச்சரித்தும், தீவிரமாக கண்காணித்தும் அதையும் மீறி அவர்கள் பந்தயத்தில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பைக் ரேசில் ஈடுபடுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News