செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும்: புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி

Published On 2017-01-18 06:27 IST   |   Update On 2017-01-18 06:27:00 IST
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மந்திரிசபையை கூட்டி அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
ஆலந்தூர்:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மந்திரிசபையை கூட்டி அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு உள்ளனர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு. தமிழகத்தின் கலாசாரத்தை விளக்கக் கூடியது.

உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது வருத்தத்துக்குரியது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் தன் ஒரு முடிவு காணமுடியும் என ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக பிரதமர் மோடி தனது மந்திரிசபையை கூட்டி அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும். பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நடத்த பிரதமர் உதவிபுரிவார் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என போராட்டங்கள் வலுப்பெறுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என விரும்புகின்றனர். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News