காஞ்சீபுரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேருர் தாலுக்கா அரசாணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். இவரது மகன் விஜய் (வயது 24).
கேரளாவில் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து சொந்த ஊரான அரசாணிமங்கலம் வந்துள்ளார்.
நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற விஜய் திரும்பி வரவில்லை. அவர் நண்பர்களை பார்த்து வருவதாக கூறி இருந்தார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் அரசாணி மங்கலம் காலனி செல்லும் பகுதியில் விஜய் கை மற்றும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து உத்திரமேருர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
கொலையுண்ட விஜயும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் வேளச்சேரிக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.
இதனால் மனவேதனை அடைந்த விஜயின் காதலி கடந்த மாதம் தற்கொலை செய்து இருக்கிறார். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் விஜய் மீது கோபத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பொங்கலையொட்டி விஜய் சொந்த ஊருக்கு வந்து இருப்பது அவர்களுக்கு தெரிந்தது. இந்த காதல் விவகாரத்தில் விஜய் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விஜய்க்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.