செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபருக்கு 4 ஆண்டுக்குப் பிறகு நினைவு திரும்பியது

Published On 2017-01-13 14:53 IST   |   Update On 2017-01-13 14:53:00 IST
செங்கல்பட்டு பகுதியில் சுற்றித்திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபருக்கு 4 ஆண்டுக்குப் பிறகு நினைவு திரும்பியது. அவரின் பெற்றோரை கண்டுபிடித்து கலெக்டர் ஒப்படைத்தார்.
காஞ்சீபுரம்:

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவரது மகன் ராதே ஷியாம் (30). இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது.

அவர் ராமேஸ்வரம் செல்லும் ரெயிலில் ஏறி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டார்.

மாவட்டத்தின் பலபகுதிகளில் சுற்றி திரிந்த அவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதுப்பட்டினத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் மீட்டனர். பின்னர் அவரை மறு வாழ்வு மையத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் ராதே ஷியாமிற்கு சில மாதத்துக்கு முன்பு நினைவு திரும்பியது. தன்னைப்பற்றிய விபரங்களை அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதையடுத்து ராதே ஷியாமை குடும்பத்தினருடன் சேர்க்க மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டார். இதுபற்றி உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ராதே ஷியாமின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் காஞ்சீபுரம் வந்தனர். கலெக்டர் கஜலட்சுமி, ராதே ஷியாமை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்று சேர்ந்த குடும்பத்தினர் அவரை கண்ணீருடன் கட்டித்தழுவிய காட்சி காண்போரை நெகிழ வைத்தது.

Similar News