செய்திகள்

குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு

Published On 2016-12-15 22:33 IST   |   Update On 2016-12-15 22:33:00 IST
ஆண்டிமடம் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வரதராஜன்பேட்டை:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதன்மூலம் அழகாபுரம் வடக்கு தெரு, நாயுடு தெரு, திராவிடநல்லூர் செல்லும் தெரு ஆகிய தெருக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஆழ்குழாய் கிணற்றில் நீர் இல்லாமல் பழுதடைந்ததால் கடந்த 6 மாதமாக இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற இயலவில்லை. இதனால் மற்றொரு நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வந்தனர். தற்போது அங்குள்ள மோட்டாரும் பழுதடைந்ததால் குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களது பகுதிக்கு குடிநீர் வழங்க கோரி நேற்று காலி குடங்களுடன் அழகாபுரம் சிலம்பூர்-ஆண்டிமடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகர், செந்தில்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும். அதுவரையில், இன்னொரு நீர்த்தேக்க தொட்டியின் பழுதடைந்த மோட்டாரை சரிசெய்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Similar News