நாகை அருகே வாகனம் மோதி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மகாராஜபுரம் மேல்பாதி மெயின்ரோட்டை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் முத்துகுமரன்(வயது24). இவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அதே ஊரை சேர்ந்த வீரப்பன் மகன் கஜேந்திரன் (22) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் இருவரும் நேற்று இரவு திருத்துறைப்பூண்டியில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது வேலூர் பாலம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலே முத்துகுமரன் இறந்தார். கஜேந்திரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், ராஜ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.