செய்திகள்
ஈரோடு அருகே தீபாவளியை கொண்டாட வந்த வாலிபர் அணையில் மூழ்கி பலி
ஈரோடு அருகே தீபாவளியை கொண்டாட வந்த வாலிபர் அணையில் மூழ்கி உயிரிழந்தார்.
ஈரோடு:
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி தண்ணீர் பந்தல் என்ற இடத்தை சேர்ந்தவர் மசப்பன். இவரது மகன் ராம் குமார் (வயது 23).
ராம் குமார் தீபாவளியை கொண்டாட தனது நண்பர்களுடன் ஈரோட்டை அடுத்த காரணாம் பாளையம் அணைப்பகுதிக்கு வந்தார்.
அணையை சுற்றி பார்த்த அவர்கள் பிறகு அணையில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அணையின் ஆழமான பகுதியில் குளித்து கொண்டு இருந்த போது ராம் குமார் தண்ணீரில் மூழ்கினார்.
இதை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ராம்குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் தண்ணீரில் மூழ்கிய ராம் குமார் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.